Monday, December 31, 2007

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மலை பகுதியின் ஆரோக்கியமே (மரம்) சமவெளியின் வாழ்வாதாரம். (நீர்)

Friday, December 28, 2007

மருத்துவ தாவரங்கள் பயிரிடுவோருக்கு மத்திய அரசு நிதியுதவி.

உலகமயம், தாராளமயத்தினால் விவசாயமே கடினமாக இருக்கும் போது அதன் ஒரு பிரிவான மருத்துவ தாவர வளர்ப்பு இன்னும் சரியான சந்தை வாய்ப்புக்கள் இன்மையால் மேலும் கடினமாகிறது. ஆனால் உலகளவில் அதன் தேவைகள் அதிகரித்து வருவதால் நிதியுதவி செய்து சுமார் 32 வகை தாவரங்களை பயிரிட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முன்வந்துள்ளது.

இச்செய்தியை உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Friday, December 21, 2007

அழகு தரும் மலர் மரங்கள் - புகைப்படம்.

குளிர் காலத்தில் பூத்துக் குலுங்கும் பெங்களூரு நகரையும், பூத்துக் குலுங்கும் மரங்கள் நிறைந்த மேல் நாட்டு தொழிற்சாலை, பல்கலைகழக,கல்லூரி வளாகங்களை புகைப்படத்தில் பார்க்கும் பொழுது மனதில் புத்துணர்ச்சி வருகிறது. பொதுவாக நமது நகரங்களும், பல்கலைகழக, கல்லூரி, தொழிற்சாலை வளாகங்கள் மரங்களின்றி கோடைகாலங்களில் வறட்சியுடன் காணப்படுகின்றன. நிழல் தரும் மரங்களுடன் அழகு தரும் மலர் மரங்களையும் நட்டு நிழலுடன் புத்துணர்ச்சியும் பெறலாமே!!!!! மரங்களின் எண்ணிக்கையும் அதிகமாகுமே.


உங்கள் பார்வைக்காக சில மலர் மரங்கள்.






ஒன்றிரண்டை தவிர மற்றவை தமிழகத்தில் நன்கு வளரும்.




Friday, December 7, 2007

புகைப்பட போட்டிக்கு எனது மலர்கள்

முதல் இரண்டும் போட்டிக்கு மற்றவை பார்வைக்கு.








சேணைக்கிழங்கின் பூ துர்வாசனை தாங்க இயலாது. ஈ அமர்ந்திருப்பதை காணலாம்.



Thursday, December 6, 2007

தமிழகத்தில் பேரீட்சை மரம்!!!!!!!

பன்னாட்டு நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் வறட்சியை தாங்கி வளரும் பயிருக்கு மரபணு மாற்றம் (வறட்சியை தாங்க), மாற்றுப்பயிர் (உ.த. காட்டாமணக்கு ) என கோடிகளில் செலவு செய்து விவசாயிகளை மேலும்
குழப்பத்திலும், நஷ்டத்திலும் வாழ வைத்து, அவர்கள் தற்கொலையை (பார்க்க The Hindu Dt 12-15 Nov 2007 ) நோக்கி போய்கொண்டிருக்கும் வேளையில் வறட்சியை தாங்கி, செலவும் பராமரிப்பும் குறைந்த, அதிக லாபம் தரும்
ஒரு நீண்ட கால மாற்றுப் பயிரை அறிமுகப்படுத்தி தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ஒரு விவசாய அமைதி புரட்சியை செய்து கொண்டிருப்பவர் தருமபுரி விவசாயி திரு.S.நிஜாமுதீன்.



திரை கடலோடி திரவியம் தேடி கூடவே ஒரு மாற்றுப்பயிரையும் கண்டு அதனை தன் நிலத்திலேயே நட்டு சோதனை செய்து வெற்றியடைந்த பின் அறிமுகம் செய்து இன்று சுமார் 2000 ஏக்கர் தமிழகத்திலும் சுமார் 700
ஏக்கர் அண்டை மாநிலங்களிலும் விரும்பி பயிரிடப்படுகின்றது என்பது திரு.S.நிஜாமுதீன் அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

கீழ்கண்ட நன்மைகள் இதைப் பயிரிடுவதால் கிடைக்கின்றது.

1. குறைந்த நீர்.

2. பராமரிப்பு செலவு குறைவு.

3. ஆடு,மாடுகள் சேதப்படுத்துவதில்லை.

4. களர் நிலத்திலும் வளர்கிறது.

5. நீண்ட நாட்கள் பழங்களைப் பதப்படுத்தி பாதுகாக்கலாம்.

6. நீண்ட காலப்பயிர் 5-100 ஆண்டுகள் வரை.

7. நல்ல மகசூல் சுமார் 100 - 300 கிலோ/ஆண்டு.

8. விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்கின்றது.

9. சிறந்த சத்துள்ள (இரும்புச்சத்து) பழம்.

10. தரிசு நிலம் மேம்படுவதோடு வேலை வாய்ப்பும் பெருகுகின்றது.

11. முக்கியமாக அந்நிய செலவாணி மிச்சப்படுகிறது.


உலகிலயே பேரீட்சையை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான்.

==============================================
ஆண்டு ------ இறக்குமதி----------மதிப்பு.

----------------------மெ.டன்---------அமெ.டாலர்(,000)

==============================================

1998 -------------244088 -----------------54591

1999 -------------238195 -----------------45798

2000 ------------192619 ------------------41554

2001 ------------244367 ------------------52786

2002 ------------171523 ------------------27798

2003-------------193755-------------------33011

2004-------------247875-------------------46407

=============================================
Source : FAO/UN



இறக்குமதியை குறைத்தாலே அந்நிய செலவாணி மிச்சப்படுகிறது. எனவே தமிழக அரசும், மத்திய அரசும் தங்கள திட்டங்களில் இதனை அறிமுகம் செய்தால் அடுத்த 10-20 ஆண்டுகளில் நிறைய அந்நிய செலவாணியை மிச்சபடுத்தமுடிவதோடு நிலத்தின் பயன்பாட்டையும் அதிகரிக்கமுடியும்.மிகச் சிறந்த ஒரு மாற்றுப்பயிரை நமக்கு அறிமுகம் செய்த திரு.S.நிஜாமுதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் தொடர்புக்கும் விளக்கங்களுக்கும்
கீழ் கண்ட வலைதளத்தைக் காணுங்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



WHERE THERE IS A WILL THERE IS A WAY.

Monday, November 26, 2007

செடிகள் வளர்க்கும் பை (Grow Bag )

மாற்றம் நிலையானது என்பார்கள்" இந்த வழியில் விவசாயத்தில் நிறைய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் மண்ணில்லா விவசாயம் (Soil less culture). பொதுவாக நகர பகுதியில் இட பற்றாக்குறை
காரணமாக சிறு நகரங்களில் கூட அடுக்குமாடி குடியிருப்புக்கள் மிக அதிகமாக தோன்ற ஆரம்பித்துள்ளது. அதிக வாங்கும் சக்தி காரணமாக எல்லோரது வீட்டிலும் அழகு செய்யும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது குறிப்பாக அழகுச்செடிகள் வளர்ப்பு. கணவன்,மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் போது ஆர்வம் இருப்பினும் அதனை கவனிப்பதற்கு நேரம், நல்ல மண், தண்ணீர் (குடிப்பதற்கே இல்லாத போது) தேவை. இவைகளை பூர்த்தி செய்ய வந்துள்ள ஒரு பொருள்தான் இந்த செடி வளர்க்கும் பை (Grow Bag ). விவசாயத்திற்கு வேலையாட்கள் பற்றாக்குறை, குறைந்த நீர், இடம், அதிக மகசூல் என பசுமைக்கூடத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்.

கோவையில் நடந்து முடிந்த விவசாய கண்காட்சி 2007 இல் காயர் வாரியத்தில் (Coir Board ) அரங்கத்தில் அறிமுகத்திற்கு வைத்திருந்தார்கள் விசாரித்தபோது ஏற்றுமதிக்கானது என்றார்கள். இதற்கு முன்பே வளர்ப்பிற்காக என்னிடம் இருந்ததால் அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

புற உதா கதிர் (UV) தடுப்பு வசதியுடன் வெளி பகுதி வெண்மை நிறத்திலும் உள் பகுதி கறுப்பு நிறத்திலும் உள்ள இந்த பையினுள் 98 x 18 x 4.5 செ.மீ அளவில் சுத்தம் செய்யப்பட்ட தென்னை நார் கழிவு இருக்கும். நீர்
ஊற்றிய பின் 100 x 20 x 11 செ.மீ அளவில் பெருக்கமடையும். பை கிடைத்தவுடன் தேவையான அளவில் நாம் துவாரம் செய்து அதனுள் மண்புழு உரம் நிறைத்து நீர் ஊற்றினால் இயற்கை முறையிலும் திரவ இரசாயன NPK தர தற்போதுள்ள முறையிலும் பயிர் செய்ய தயாராகிவிடும்.

தென்னை நார் கழிவு ஒரு காலத்தில் சுற்றுச்சுழல் மாசுபாடு பொருளாக இருந்தது போய் இன்று உலக தரம்

வாய்ந்த மதிப்பூட்ட பட்ட பொருளாக மாறியுள்ளது.

நீரை மறு உபயோகம் (Reuse குறிப்பாக சமையலறை கழிவு நீர்) செய்யமுடிகிறது.

நீரின் அளவும் மிக மிகக்குறைவு.

களைகள் முளைப்பது இல்லை என்றே சொல்லலாம்.

மண் இல்லாமையால் வேர் மூலம் வரும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

மதிப்பு மிக்க மலர் மற்றும் ஸ்டிராபெரி (Strawberry)பழ சாகுபடிக்கு ஏற்றது (பசுமைக்கூடம்).

வீடுகளில் எளிதாக வைத்து காய்கறிகள் வளர்க்கலாம்.


Saturday, November 24, 2007

ஓளிபரப்பு மறுக்கப்பட்ட விளம்பரப் படம் (BUY NOTHING DAY 2006)

அதிக தொலைகாட்சி நிறுவனங்களால் ஓளிபரப்புச் செய்ய மறுக்கப்பட்ட(BUY NOTHING DAY 2006) விளம்பர படத்தை கீழே காணுங்கள்.


ஒன்றும் வாங்கக்கூடாத நாள் (BUY NOTHING DAY) 24-11-2007


இப்படி கூட ஒரு நாள் இருக்கிறதாவென்று நீங்கள் வியப்படையக்கூடும். ஆனால் கனடா நாட்டில் இது 1992 ஆண்டு அதிக வாங்கும் சக்தியினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய துவக்கப்பட்டது. பின் அது வலுப்பெற்று 1997 முதல் அமெரிக்காவின் அறுவடை நன்றி நாளுக்கு (நவம்பர் மாதம் 4 வது வியாழக்கிழமை American Thanksgiving Day) பின்வரும் வெள்ளிக்கிழமை வடஅமெரிக்காவிலும் மற்ற இடங்களில் சனிக்கிழமையும் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு பொருட்கள் வாங்க ஆரம்பிக்கபடும் நாட்களில் இதுவும் ஒரு நாள் அன்று இது அனுசரிக்கப்படுவது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான். வளர்ந்த நாடுகளில் தான் அதிக வாங்கும் சக்தி காரணமாக மக்கள் பருமனுடன் இருந்து நிறைய நோய்களை வரவழைத்து சுற்றுச்சூழலைக் கெடுத்தார்கள் என்றால் இன்றோ நம் நாட்டிலும் அதிக வாங்கும் சக்தி காரணமாக மக்கள் பருமனுடன் காணப்பட்டு சுற்றுச்சூழலைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டிலேயே ஒருவேளை உணவிற்கே வாங்கும் சக்தியில்லாத வேளையில் மக்கள் இருக்கும்போது எவ்வளவோ கலாச்சார சீரழிவுகளை காப்பியடிக்கும் நாம் ஏன் இந்த கருத்துள்ள நல்ல நாளை அனுசரிக்கக்கூடாது. இதனால் வருடத்தில் ஒரு நாளாவது குப்பைகளை தவிர்த்து சற்றுச்சூழலை பாதுகாத்து பிறர்க்கு உதவலாமே!!!

Tuesday, November 20, 2007

அமெரிக்காவின் இழப்பு உலகிற்கும் இழப்புத்தான்.

2005 ஆண்டு அமெரிக்காவைத் தாக்கிய காத்ரீனா மற்றும் ரீட்டா புயல் காற்றுகள் சுமார் 32 கோடி மரங்களை மிசிசிப்பி, அலபாமா பகுதிகளில் அழித்துள்ளது என கணக்கிட்டுள்ளனர். அதேபோன்று சென்றமாதம் ஏற்பட்ட கலிபோர்னிய மாநில 'தீ''யும் சுமார் 5லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை நாசப்படுத்தியதாக செய்திகள் கூறுகின்றன.



The devastation of southern Gulf Coast forests by Hurricane Katrina was documented in before-and-after images from the Landsat 5 satellite. The Interstate 10 "twin-span" bridges that cross Lake Pontchartrain east of New Orleans is seen here pre- and post-Katrina. Bayou Sauvage National Wildlife Refuge is the large patch of forest (green) the lower left portion of the LEFT image, which suffered heavy tree mortality (seen in red in the RIGHT image after the storm). (Credit: USGS)


இது ஒரு நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பாக கருதாமல் உலகிற்கு ஏற்பட்ட (சுற்றுச்சுழல்) இழப்பாக எடுத்துக் கொண்டால் அதனை ஈடுசெய்ய உலகிற்கு பல பத்தாண்டுகள் தேவை. ஏற்கனவே உலகில் கரிமிலவாயு வெளிவிடுவதில் 25% அமெரிக்காவின் பங்கு என்கின்றனர். "கியுட்டோ" ஒப்பந்தத்தில் கையொப்பம் இடாமலும் இருப்பதால் அதற்கு மேலும் சுற்றுச்சுழல் பாதுகாப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

32 கோடி மரங்களின் உணவு தயாரிப்பு இல்லை என்பதால் அவைகள் வெளியிடும் ஆக்ஸிஷன் உலகிற்கு அடுத்த 10 -20 ஆண்டுகளுக்கு கிடைக்கப் போவதில்லை மாறாக அவை மக்கப்போவதால் சுமார் 36.7 கோடி டன்கள் கரிமிலவாயுவை வெளிவிடுமென கணக்கிட்டுள்ளனர். 5லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு தீயினால் நாசப்படும் போது அது வெளியிடும் கரிமில வாயுவையும் கணக்கிட்டால் உலகமே சுற்றுச்சுழலை பாதுகாப்பதில் மிக அதிக கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்திலுள்ளது.


வெப்பமண்டல காடுகளை உலகின் குளிரூட்டி (A/C) என்பார்கள். இந்த நிலையில் வெப்ப மண்டல நாடுகளுக்கு குறிப்பாக இந்தியாவிற்கு எல்லா வகைகளிலும் நன்மை ஏற்படபோகின்றது. நாம் சற்று மரவளர்ப்பில கவனம் செலுத்தினால் நீராதாரத்தை பெருக்குவதோடு உணவு உற்பத்தியிலும் சிறந்து விளங்க முடியும். அதற்கு மேலும் உபரியாக கரிம வர்த்தகத்தில் (Carbon Trading) பணம் ஈட்டமுடியும். வருங்காலத்தில் கரிம வர்த்தகம் வெப்ப மண்டல வளரும் நாடுகளுக்கு சிறந்த மாறுதல்களை தரவுள்ளது. தேவை முனைப்புடன் கூடிய மரவளர்ப்பு. தமிழகத்திலுள்ள குறு, சிறு விவசாய்கள் தமிழக வனத்துறையை அணுகினால் ஊக்கத் தொகையுடன் "வனங்களுக்கு வெளியே மரவளர்ப்பு" என்ற திட்டத்தில் உதவ காத்திருக்கிறார்கள் அணுகிப் பயன் பெறுங்கள். வலைப்பதிவர்கள் இச்செய்தியை குறு, சிறு விவசாய்களிடம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

Source: abc News. Photo:Science Daily

Friday, November 16, 2007

ப்ரோமிலைட்ஸ் (Bromeliads) தாவரத்தின் புகைப்படங்கள்

என்னிடமுள்ள ப்ரோமிலைட்ஸ் (Bromeliads) என்ற வகை தாவரத்தை நான் பார்க்கும் போது கீழ் கண்ட வாசகம் என் நிணைவிற்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை.

IF YOU LOVE THE MOUNTAINS, RIVERS & TREES, SOONER OR LATER YOU WILL SEE THE INVISIBLE HANDS OF GOD BEHIND EVERYTHING. HIS SIGNATURE IS ON EVERY LEAF AND YOU JUST NEED EYES TO SEE.

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தாவரவியல் அறிஞர் திரு. O.ப்ரோமல் என்பவரின் நிணைவாக அவரது பெயரில் அழைக்கப்படுகிறது. இலைகள் சற்று தடிமனாகவும் பல்வேறு நிறங்களிலும், டிசைன்களிலும்(?) நம்மை அசத்தும். காட்சிக்கு சில.

Saturday, November 10, 2007

உலகின் மிக காரமான மிளகாய் நம் நாட்டிற்கு சொந்தமானது.

கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிக காரமான மிளகாய் என்று 2006 இல் இடம் பெற்ற "பூட் ஜொலோகியா" (Bhut Jolokia) என்ற மிளகாய் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சொந்தமானது. அஸ்ஸாம்மிய மொழியில் Bhut = பேய், Jolokia = மிளகாய் எனவே இதனை "பேய் மிளகாய்" என்று இதன் காரத் தன்மைக்காக காரணமாக அழைக்கிறார்கள்.


காரத் தன்மை "ஸ்கோவில் ஹீட் யூனிட்ஸ் " (Scoville Heat Units) SHU என்ற அளவில் அளக்கப்படுகிறது. பூட் ஜொலோகியாவின் கார அளவு 10,01,304 SHU ஆகும். இதனை அடுத்து வரும் இனம் ரெட் சவீனா (Red Savina) என்ற மிளகாய் கார அளவு 5,77,000 SHU ஆகும்.

இயற்கை சாயத்திற்காகவும், காப்சைசின் என்ற வேதி பொருள் எடுக்கவும் பயன்படுகிறது. சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 10 விதைகள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை இந்தியாவில் ரூ.20/- கும் சர்வதேச சந்தையில் 5 us டாலருக்கும் விற்கப்படுகின்றது என்றால் இதன்
முக்கியத்துவத்தை ஒரளவு யூகிக்கமுடியும்.

Source: ஸ்பைசஸ் இந்தியா. படம் உதவி : வலைதளம்.

Sunday, November 4, 2007

23 நாட்களில் இயற்கையின் வர்ணஜாலம்.புகைப்படம்

இயற்கையை நாம் ரசித்தால் அது செய்கின்ற மாற்றங்கள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும். இந்த வருட துவக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த புங்கன் மரம் 23 நாட்களில் தன் பழுப்பு இலைகளை உதிர்த்து இளம் பச்சைநிறத்தைப் பெற்ற காட்சி.






பருவகால மாற்றம் உண்மைதானா? புகைப்படம்.

பொதுவாக பருவகால மாற்றத்தை நமக்கு எளிதில் உணர்த்துவதில் தாவரங்களின் பங்கு அதிகமானது. புவிவெப்பம் காரணமாக இந்த பருவகால மாற்றத்தில் முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்துள்ளது. வழக்கமாக பனிகாலத்தில் (நவம்பர், டிசம்பர்)இலைகளை உதிர்க்கும் நமது வேப்ப மரமும் புங்கன் மரமும் சென்ற ஆண்டு (2006) மிகத் தாமதமாக (மார்சு, ஏப்ரல் மாதம்) இலைகளை உதிர்த்து பின் விரைவாக தளிர்த்தது. மார்சு மாதம் ஒரு நாள் காலையில் எழுந்த எனக்கு சற்று வியப்பு காரணம் வெளியே பனிபொழிவு. எங்கள் வீட்டருகிலிருக்கும் வேப்ப மரம் தளிர்த்திருக்கவேண்டிய ஏப்ரல் மாதத்தில் கூட கருகிய இலையை உதிர்த்துக்கொண்டிருந்தது.
இந்த ஆண்டு தலைகீழ் குளிர்காலத்திற்கு முன்பே (அக்டோபர் மாதமே) இலைகள் கருகி உதிர ஆரம்பித்துள்ளது. குளிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. மரங்கள் எப்படி மாற்றத்தை வெளிப்படுத்தப்போகிறது தெரியாது.

மார்சு மாதத்தில் பனி பொழிவு புகைபட நாள் 22-03-06.

வேப்ப மரம் ஏப்ரல் மாதம் இலையுதிர்த்தல் 17-04-06

வேப்ப மரம் அக்டோபர் மாதம் இலையுதிர்த்தல் 17-10-07

வேப்ப மரம் முழுவதுமாக இலையுதிர்த்தல் 25-10-07


புங்க மரம் முழுவதுமாக இலையுதிர்த்து தளிர்த்துள்ளது26-10-07

விளைவுகளில் முக்கியமானது விவசாயம். ஓன்று விளைச்சல் குறைந்து பாதிப்பு ஏற்படும் அல்லது விளைச்சல் அதிகமாகி விலை வீழ்ச்சியடைந்து பாதிப்பு ஏற்படும். எப்படியாயினும் பருவகால மாற்றம் விவசாயத்தை அதிகம் பாதிக்கும் என்பதில் ஐயம்மில்லை.

"புவி வெப்பத்திற்கெதிராய் நம்மால் முடிகின்ற 20 செயல்கள் " என்ற எனது பதிவினைப் பார்க்கவும்.

Monday, October 15, 2007

இயற்கையும் செல்வந்தனும்

செல்வந்தனே நீ ஆயிரம் பேருக்கு எஜமானாய் இருக்கலாம்
ஈ, எறும்பு ஒன்றுக்காவது நீ எஜமான் ஆகமுடியுமா?

தெருவென்ன ஊரே உன்னை சீமான் என்று சொல்லாம்
சிட்டுக் குருவியொன்று உனக்கு ஆமாம் போடுமா?

உன் பத்து ரூபாய் தாளுக்கு பத்துப் பேர் வரலாம்
நீ பத்தாயிரம் நீட்டு ஒரு பட்டாம் பூச்சி வருமா ?

உட்கார்ந்து இருப்பது உன் தோட்டத்துப் பூவில் என்றாலும்
உன் வருகையைக் கண்டு வண்டுதான் எழுந்திருக்குமா?

தேன் கூட்டைத் தொடு..செல்வந்தனாயிற்றே என்று
கொடுக்கால் அது உன்னை கும்பிட்டு நகருமா?

இத்தனையும் நடந்தால் பணக்காரனே!உன் பணம் பத்தென்ன?
பதினொன்றும் செய்யுமென்று சத்தியம் செய்யலாம்.

ஆனால் இயற்கை முன் அனைவரும் சமமென்று
உணர்வது நீ எப்போது ?அதனை காப்பது எப்போது?

ஒரு கம்பெனி மாத இதழிலிருந்து
(கடைசி இரு வரிகள்தவிர)எடுக்கப்பட்டது.

Monday, October 1, 2007

மரங்களுக்காக உயிரையும் கொடுத்தவர்கள்


சுற்றுச்சுழல் அதிகம் மாசுபடாமல் இருந்த 1730 ஆம் ஆண்டுகளிலேயே மரங்களுக்காக 363 பேர் ஒரே நாளில் உயிரையும் தியாகம் செய்கிறார்கள் என்றால் அந்த மக்கள் இயற்கையை போற்றி பாதுகாத்த முறையினை நாம் கண்டிப்பாக ஆராதிக்கவேண்டும். இந்த உண்மை சம்பவம் நடந்த இடம் நம் இந்தியாவில் ஆனால் நிறைய மக்களுக்கு இந்த தியாகத்தின் ஆழம் புரியவில்லை. இதனை நம் குழந்தைகளுக்கு கூறி தியாக தினமாக நினைவு கூர்தல் வேண்டும்.

ஜோத்பூர் மன்னர் 1730 ஆம் ஆண்டு புது அரண்மணை கட்டுவதற்காக பிஷ்னாயி இனமக்கள் வாழுகின்ற பகுதிக்கு தனது ஆட்களை அனுப்பி மரங்களை வெட்டி வரும்படி கூறினார். ஆட்களும் காடுகளில் மரம் வெட்ட வந்தனர். ஆனால் மரங்களின் முக்கியத்துவத்தை புரிந்த பிஷ்னாயி இனமக்கள் வெட்டவேண்டாம் என கேட்டுக் கொண்டனர் அரண்மணை ஆட்கள் விடுவதாய் இல்லை. 3 பெண் குழந்தைகளுக்கு தாயான அம்ரிதா தேவி தன் 3 பெண் குழந்தைகளுடன் மரங்களை காக்க முதலில் உயிர் துறந்தார். அன்று மாலைக்குள் இவர்களையும் சேர்த்து 363 பேர் வெட்டி வீழ்த்தப்பட்டனர். இதனை அறிந்த மன்னர் பிஷ்னாயி இனமக்கள் வாழுகின்ற பகுதிகளில் மரம் வெட்ட கூடாது என ஆணை பிறப்பித்தார்.

படித்து பட்டங்கள் பல பெற்ற இக்கால மன்னர்களும் இதே தவறினைத் தான் திரும்ப திரும்ப செய்கின்றனர். 1974 ஆண்டு ரேணி காட்டை குறி வைத்த கூட்டம் கௌரா தேவி என்ற பெண்மணி தனது உயிரையும் தியாகம் செய்ய தயாரானதால் வேறு வழியின்றி திரும்பி சென்றனர். இந்த நிகழ்ச்சிக்குப்பின் சிப்கோ இயக்கம் வலுப்பெற்றது. இன்று நாம் சற்று நிம்மதியுடன் இருப்பதற்கு சிப்கோ இயக்கம் காரணம் என்றால் அது மிகையில்லை.

இக்கால மன்னர்களுக்கும், வருங்கால மன்னர்களுக்கும் ஒரு வேண்டுகோள்;

"மரங்கள் இல்லாமல் மனிதன் வாழமுடியாது ஆனால்
மனிதன் இல்லாமல் மரங்கள் வாழமுடியும்".

இந்த உண்மையை புரிந்து வாழ்கை முறையை செம்மைபடுத்துவோம்.

Tuesday, September 25, 2007

மழைநீர் சேமிப்பு- புகைபடங்கள்

வட கிழக்கு பருவ மழை தொடங்கவிருக்கும் நேரத்தில் விவசாய நிலங்களிலும் வீடுகளிலும் எவ்வாறு மழைநீரை சேமிக்கலாம் என்ற புகைபடங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

நிலங்களின் ஓரத்தில் செவ்வக வடிவில் குழி வெட்டுதல்.

நிலங்களின் நடுவில் பண்ணை குட்டை அமைத்தல்.

நிலங்களின் ஓரத்தில் பண்ணை குட்டை அமைத்தல்


நிலங்களின் நடுவில் பண்ணை குட்டை அமைத்து மண் சரிவு ஏற்படாமல் வெட்டிவேர் சுற்றிலும் நட்டுதல்.
நிலங்களின் நடுவில் நீளமாக குழி வெட்டுதல்



நிலங்களின் நடுவில் நடுவில் சிறு சிறு குழிகள் வெட்டுதல். 1 சதுர கன அடி (1 x 1 x 1 ) குழி சுமார் 28 லிட்டர் நீரை தக்க வைக்கும்.


சிறு ஓடைகளில் கற்களைக்கொண்டு தடுப்பு அணை அமைத்தல்.


குட்டைகளின் ஓரத்தில் மரங்கள் நடுதல்.

வீடுகளில் தண்ணீர் தொட்டிகளில் சேமித்தல்

மிக சிறிய குளங்கள் அமைத்து அழகு செய்தல்.