Thursday, December 31, 2009

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் ஒரு சிறு செய்தி.

திருமதி.வாஞ்சி பாட்டியின் கையிலிருப்பது நம் நாட்டின் எதிர்காலம் (நீர்) என்று சொல்லலாம். காரணம் பாரம்பரிய மானாவாரி நெல் ரகத்தை மற்றவர்கள் கைவிட்ட நிலையில் இன்னும் பாதுகாத்து ஒவ்வொரு வருடமும் தவறாமல் பயிர் செய்து இன்றளவும் காப்பாற்றி வருகிறார். இயற்கை தந்த இந்த ரகத்தை நமக்கு தருவதற்கு இவர் தயார் ஆனால் நாம் அதனை பெற்று நீர் நிர்வாகத்தில் சிக்கனத்தை கடைபிடிக்க போகிறோமா ?? அல்லது ‘உல்டா’ செய்து நெல் ரகத்தை உருவாக்கப் போகிறோமா ?? எதுவாயினும் இவரது புகைபடத்தை வாழ்த்து அட்டையாக மாற்றி அவரை கௌரவப்படுத்துவதில் இவ்வலைப் பூ மகிழ்ச்சியடைகிறது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மேலும் இந்நெல் ரகம் பற்றி அறிய கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்தவும்.

http://maravalam.blogspot.com/2009/02/blog-post.html
http://maravalam.blogspot.com/2009/09/blog-post_19.html

Monday, December 28, 2009

யோக முறையில் ஜல நேத்தி என்னும் மூக்கு கழுவும் கிரியை.

சில எளிய உபகரணங்களைக் கொண்டு சில கிரியைகளை செய்வதால் நேரம், மருத்துவ செலவு, போன்றவைகளை வெகுவாகக் குறைத்து உடல் உபாதையின்றி மகிழ்ச்சியுடன் வாழலாம். நவம்பர் - ஜனவரி மாதங்கள் வரை பனிகாலமாக இருப்பதால் சளி, கபம், சைனஸ், ஆஸ்தமா போன்ற தொல்லைகளால் அநேகர் அவதிபடுவதை பார்த்திருக்கிறேன். இரவு நேரங்களில் மூக்கடைப்பு காரணமாய் தூக்கத்தை இழக்கும் நபர்களும் உண்டு. குறிப்பாக இந்த பருவத்திலும் குளிர்பதன அறையில் இருந்து வேலை செய்பவர்களுக்கு தொடர் ‘தும்மல்’ தவிர்க்க முடியாதது. வாழ்கை முறை, உணவு முறை மாறியதும் காரணம். நமது பாரம்பரிய முறையில் இதனை எளிதாக குணப்படுத்தலாம்.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு இந்த “ஜல நேத்தி” என்னும் மூக்கு கழுவும் கிரியைதான். சுமார் 1 அல்லது 2 மேசை கரண்டி உப்பை மிதமான வெப்பநிலையிலுள்ள சுத்தமான நீரில் நன்கு கலக்கி மேற்கண்ட குவளையில் ஊற்றி உடம்பை சற்று வளைத்து முன்நோக்கி வைத்து தலையை சற்று சாய்த்து மூக்கு துவாரத்தில் குவளையின் துவாரத்தை பொருத்திவிட்டால் நீர் அடைப்பில்லாமல் இருந்தால் எளிதாக அடுத்த துவாரத்தில் வந்துவிடும்.

சளி இருந்தால் அதனையும் சவ்வூடு பரவல் (Osmosis) முறையில் அடர்த்தியின் காரணமாய் இழுத்துகொண்டு வந்துவிடும். நீர் மூக்கினுள் செல்லும்போது வாய் வழியாக சுவாசிக்கவும்.

பிறகு மாற்றி அடுத்த துவாரத்தில் வைத்து செய்ய வேண்டும். உறிஞ்சக்கூடாது. குளிர்ந்த நீரை ஆரம்பத்தில் தவிர்க்கவும். சிலருக்கு உடனடியாக நீர் வெளிவராது பழக பழக சரியாகிவிடும். இல்லையெனில் அனுபவசாலிகளின் மேற்பார்வையில் செய்து பழகவும். இது பாரம்பரிய முறை இருப்பினும் கவனம் தேவை.ரூ.15/= விலையில் சர்வோதய சங்கக் கடைகளில் இக்குவளை கிடைக்கும்.

Sunday, December 20, 2009

முடிவிற்கு வந்த கோபன்ஹேகன் பருவநிலை மாநாடு.

தங்களின் வாழ்வாதாரம் அழிவதை எண்ணி அழுத தீவுநாடுகள், கியுட்டோ தீர்மானங்களை அழிக்க துணிந்த வளர்ந்த நாடுகள், இவற்றுக்கிடையே வளரும் நாடுகள் என திகில் படம் போன்று கடைசியில் ‘சுபம்’ என்று கோபன்ஹேகன் மாநாடு முடிந்தது. கிராம சந்தையின் கடைசி நேர வியாபாரம் போன்று திரு.ஒபாமாவின் கடைசி ‘நேர பேரம்’ பிரேசில், தென்ஆப்ரிக்கா, இந்தியா, சீன தலைவர்களுடன் அமர்ந்து 30 பில்லியன் டாலர்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வளரும் நாடுகளுக்கு தருவதாக கூறி மாநாட்டை முடிவிற்கு கொண்டு வந்தார். எளிதாக வளர்ந்த நாடுகள் தப்பிவிட்டன. தீவு நாடுகளின் கதி !!!! காலம் தான் பதில் சொல்லும்.


படங்கள் உதவி : வலைதளம்

Thursday, December 17, 2009

கோபன்ஹேகன் மாநாடு - மாற்றமும் ஏமாற்றமும்.

கோபன்ஹேகன் மாநாட்டை கலக்கிய பேச்சு உலகின் 4 வது மிக சிறிய தீவுகள் நாடான “துவாலு” நாட்டின் பிரதிநிதி திரு.இயன் ப்ரை அவர்களுடையது. பேச்சை முடிக்கும் முன் அழுதபடி எங்கள் நாட்டின் தலைவிதி உங்கள் கையில் என்ற யதார்த்தமான உண்மையை கூறி முடித்தவுடன் கைதட்டல் அடங்க சற்று நேரம் ஆனது. கடல் மட்டத்திலிருந்து அதிகபட்ச உயரமான இடம் சுமார் 4.5 மீட்டர் கொண்ட நாடு துவாலு. பெரிய அலைகள் வந்தால் நிலைமை மிக மோசமாகிவிடுகிறது. மக்கள் தொகை சுமார் 11,000. பரப்பளவு சுமார் 26ச.கி.மீ. மக்கள் வெளியேறி நியுசிலாந்து போன்ற நாடுகளில் குடியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

திரு.இயன் ப்ரை அவர்களின் பேச்சு.


இதுபோன்ற உலக மாநாடுகளில் வளர்ந்த நாடுகள் நிதியுதவி, ஆயுத உதவி, மிரட்டல் போன்றவற்றால் ஏழை மற்றும் வளரும் நாடுகளை தங்கள் விருப்பத்திற்கு இணங்க வைத்து தங்கள் உல்லாச வாழ்விற்கு பங்கம் வராமல் காத்துக் கொண்டனர். ஆனால் ‘தோகா’ மாநாட்டிலிருந்து நிலைமை மாறி வருவது மகிழ்ச்சியை தருகிறது. இந்த மாநாட்டில் ஒரு மிகச்சிறிய நாடுகூட அதன் உண்மைநிலையை கூறி நியாயம் கேட்டதும் அதன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாடத்தை நடத்தி பணக்கார நாடுகளை சிந்திக்க வைத்ததும் நல்ல மாற்றம்.

தொழிற்புரட்சி என்று 1850ம் ஆண்டு முதல் வாயு மண்டலத்தில் குவிக்கப்பட்டுள்ள கார் பன் டை ஆக்ஸைடு (கரியமிலவாயு) கழிவுகளில் 4 ல் 3 பங்கை பணக்கார நாடுகளே வெளியேற்றியுள்ளன. மேலும் அணுகுண்டு, 2 உலகப் போர்கள், மற்ற நாடுகளை சுரண்ட பொய்யைக் கூறி போரில் ஆரம்பித்து உலகை மாசுபடுத்தியதும் இந்த பணக்கார நாடுகளே. எனவே, பிரச்சனைக்குத் தீர்வு காண முன்கை எடுக்க வேண்டியது பணக்கார நாடுகளே. ஆனால் கியுட்டோ ஒப்பந்தத்தை ஒதுக்குவதில் அவைகள் முனைந்திருப்பது பெரிய ஏமாற்றம்.

இருக்கின்ற இருநாட்களில் இந்த புவியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முடிவுகளை எடுக்க மாநாட்டில் கலந்து கொண்டுள்ள தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதனை துஷ்பிரயோகம் செய்யாமல் நல்லமுடிவுகள் எடுக்கப்பட இவ்வலைப் பூ விரும்புகிறது.

Friday, December 11, 2009

மரத்தை அசுரத்தனமாக அறுக்கும் டிராக்டர்.

அரை நிமிடத்தில் மரத்தை அறுத்து பட்டையையும் உரித்து அளவிற்கு துண்டும் செய்துவிடுகிறது இந்த டிராக்டர் போன்ற வண்டி. ஆஸ்திரேலியாவில் இதனை பயன்படுத்துவதாக அறிந்தேன். இவைகள் நம் நாட்டிற்கும் நிச்சயம் வரும். பாதிப்புக்கள்/ நன்மைகள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு பக்கம் ஆள் பற்றாகுறையை நீக்கினாலும் மறுபுறும் இதன் வேகம் பிரமிப்பைத் தருகிறது. நீங்களும் அதன் அசுர வேகத்தை பாருங்களேன்.

Tuesday, December 8, 2009

45 நாடுகள் , 56 செய்தி ஏடுகள் ஒரு பொது தலையங்கம்.

உலகில் இதுவரையில் நடந்திராத ஒரு முயற்சியாக, 45 நாடுகளில் வெளி வரும் 56 செய்தி ஏடுகளில் இன்றைய தினம் (டிசம்பர் 7) ஒரே குரலில் பொது தலையங்கம் எழுதப்படுகின்றன. இதை ஏன் செய்கிறோம் என்றால், மனிதக் குலம் ஒரு பயங்கர நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு தீர்மானகரமாக செயலில் இறங்கவில்லை என்றால், பருவநிலை மாற்றம் நமது புவிப் பந்தை முற்றிலும் சிதைத்துவிடும்; நமது பாதுகாப்பும், வளமும் நாசமாகும்.

கடந்த 14 ஆண்டுகளில் 11 ஆண்டுகள், வெப்பம் மிகுந்த ஆண்டுகளாகவே கழிந்துள்ளன; ஆர்க்டிக் பெருங்கடலின் பனிப்பாறைகள் உருகுகின்றன; கடந்த ஆண்டு மிகக் கடுமையாக அதிகரித்த எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள், எதிர்கால நாசத்தை முன்னறிவிக்கும் அபாய எச்சரிக்கையே. மனிதர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதை விட, மிகப் பெரும் நாசத்தை கட்டுப்படுத்த நமது கையில் இருப்பது மிகக் குறுகிய காலமே என்று உணர வேண்டும் என்று அறிவியல் பத்திரிகைகள் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளன. ஆனால், இந்த உலகம் இன்னும் இதில் முக்கிய கவனம் செலுத்த மறுக்கிறது.

நூற்றாண்டுகாலங்களாக மாற்றமடைந்து வரும் பருவநிலையின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை தீர்மானிக்கிற மாநாடு அடுத்த 14 நாட்களுக்கு நடைபெறுகிறது. கோபன்ஹேகனில் நடக்கும் இந்த மாநாட்டில் கூடுகிற 192 நாடுகளின் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்: தயக்கம் கொள்ளாதீர்கள்: சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்; ஒரு வரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்ளாதீர்கள்; நவீன அரசியல் வரலாறு மனித குலத்திடம் விட்டுச் செல்கிற மிகப் பெரும் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வாய்ப்பை கைப்பற்றிக் கொள்ளுங்கள். இது பணக்கார உலகத்திற்கும், ஏழை உலகத்திற்கும் இடையிலான மோதலாக இருக்க வேண்டாம்; அல்லது கிழக்கு உலகத்திற்கும் மேற்கு உலகத் திற்கும் இடையிலான சண்டையாக இருக்க வேண்டாம். பருவநிலை மாற்றம் ஒவ்வொரு மனிதரையும் பாதிக்கிறது. எனவே அதற்கு தீர்வு காண ஒவ்வொரு வரும் உறுதி ஏற்க வேண்டும். இது தொடர்பான அறிவியல் சிக்கல் நிறைந்ததுதான், ஆனால், புள்ளி விபரங்கள் மிகத் தெளிவாகவே நமது கையில் இருக்கின்றன.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பதை 2 சென்டிகிரேடு அளவிற்கு குறைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதற்கு அடுத்த 5 முதல் 10 ஆண்டு களில் இந்த உலகம் வெளியிடும் கரிய மிலவாயு கழிவுகளின் அளவை மிகப் பெரும் அளவில் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. கழிவுகள் வெளியேற்று வதில் ஏற்படும் சிறிதளவு உயர்வு கூட புவியின் வெப்பநிலையில், 3 முதல் 4 சென்டிகிரேடு அளவிற்கு மிகப்பெரும் அதிகரிப்பை செய்யும். இது மனிதர்கள் வாழும் கண்டங்களை நாசமாக்கும்; நமது விவசாய நிலங்களையெல்லாம் பாலை வனமாக்கும்; உலகின் தாவர வகைகளில் பாதி அளவு அழிந்து போகும்; கோடிக் கணக்கான மக்கள் வாழ்வை தேடி இடம்பெயர வேண்டிய அவலம் ஏற்படும்; பல நாடுகள் கடலுக்குள் மூழ்கிப்போகும்.

கோபன்ஹேகன் மாநாட்டில் நடக்கப் போகும் பேச்சுவார்த்தைகளின் சாராம்சம், பருவநிலை மாற்றம் என்ற மிகப்பெரும் சுமையை பணக்கார உலகமும், வளர்முக உலகமும் எப்படி தீர்ப்பது என்பதும், வாழ்வாதாரங்களை எப்படி பங்கிட்டுக் கொள்வது என்பதுமே ஆகும். இந்த மாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருவதும், அவரது வெள்ளை மாளிகையிலிருந்து வரப்போகும் கருத்துக்களுமே முக்கியத்துவம் பெறும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், கோபன்ஹேகனில் கூடப்போகும் உலக அரசியல்வாதிகள் ஓர் உலக உடன்படிக் கையை, நியாயமான, சீரிய அம்சங்களுடன் கூடிய பிரகடனத்தை உருவாக்கி வெளியிட வேண்டும். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பான் நகரில் நடைபெற போகும் ஐ,நா. சபையின் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு, அவர்களது இறுதி இலக்காக இருக்க வேண்டும்.

சீனா போன்ற அதிக மக்கள் தொகை உள்ள நாடுகள் தங்களது கரியமில வாயு கழிவுகளை குறைப்பதற்கு இன்னும் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவரை இந்த பிரச்சனைக்கு தீர்வில்லை என்று பணக்கார நாடுகள் கூறுகின்றன. ஆனால், உலகில் இதுவரை யிலும் குவிக்கப்பட்டுள்ள கரியமில வாயுக் கழிவுகளுக்கு பணக்கார உலகமே பொறுப்பு. 1850ம் ஆண்டு முதல் வாயு மண்டலத்தில் குவிக்கப்பட்டுள்ள கார் பன் டை ஆக்ஸைடு (கரியமிலவாயு) கழிவுகளில் 4 ல் 3 பங்கை பணக்கார நாடுகளே வெளியேற்றியுள்ளன. எனவே, பிரச்சனைக்குத் தீர்வு காண முன்கை எடுக்க வேண்டியது பணக்கார உலகமே. வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் தாங்கள் வெளியேற்றும் கழிவுகளை, 1990ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அளவிலிருந்து மிகப் பெரும் அளவிற்கு குறைத்தாக வேண்டும். வளர்முக நாடுகள் தங்களது பங்கினை அர்த்தமுள்ளதாக ஆக்கிட வேண்டும். இந்த திசை வழியில், உலகின் மிகப் பெரும் கழிவு வெளியேற்ற நாடான அமெரிக்காவும், வளர்முக நாடுகளில் முக்கிய சக்தியான சீனாவும் அதிமுக்கியத்துவம்வாய்ந்த நிலைபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, தூய்மை தொழில் நுட்பங்கள், ஏழை நாடுகளுக்கு கிடைப்பதை பணக்கார நாடுகள் உறுதி செய்ய வேண்டும். இத்தகைய தொழில்நுட்பங் களை பரிமாறுவது செலவு நிறைந்தது என்பது உண்மையே; ஆனால், உலகப் பொருளாதார நெருக்கடியை உருவாக்கிய மிகப் பெரும் நிறுவனங்களை மீட்க அளிக்கப்பட்ட மீட்பு நிதியை விட குறைவானதே.

இதுதவிர, வளர்ச்சியடைந்த நாடுகளின் மக்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விமானங்களில் பறப்பதற்கு ஆகும் செலவைவிட, இருப்பிடங்களில் இருந்து விமான நிலையத்திற்கு டாக்சியில் செல்லும் செலவும், அதன் விளைவும் கடுமையாக இருக்கிறது என்பதை உணர வேண்டும். உணவு முறை, பொருட்களை வாங்கிக் குவித்தல், பயணம் போன்றவற்றில் அறிவுப்பூர்வமாக திட்டமிட வேண்டியுள்ளது. எரிசக்தியையும், மின்சாரத்தையும் சிக்கனப்படுத்த வேண்டியுள்ளது.

மொத்தத்தில் பருவநிலை மாற்றம் எனும் சவாலில் இந்த உலகம் வெற்றி பெற வேண்டும் என்பதே, ஒரே நாளில் உலகம் முழுவதும் ஒரே தலையங்கத்தை வெளியிட்டுள்ள 56 செய்தி ஏடுகளின் உணர்வு ஆகும். கோபன்ஹேகனில் கூடும் நாடுகளின் தலைவர்கள் மனிதக் குலத்தின் இந்த தலைமுறையின் மீது எதிர்கால வரலாறு எழுத உள்ள தீர்ப்பினை வடித்தெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். அந்த கடமையை அவர்கள் உணர்ந்து செயல்படட்டும்.

தமிழாக்கம் நன்றி : தீக்கதிர்
==========================================================
ஆசியா 13 நாடுகள் 16 செய்தித் தாள்கள்
ஐரோப்பா 17 நாடுகள் 20 செய்தித் தாள்கள்
ஆப்ரிக்கா 08 நாடுகள் 11 செய்தித் தாள்கள்
வட, மத்திய அமெரிக்கா 05 நாடுகள் 06 செய்தித் தாள்கள்
தென் அமெரிக்கா 02 நாடுகள் 03 செய்தித் தாள்கள்

இந்தியாவில் “இந்து” நாளிதழ் (The Hindu ) இந்த பொது தலையங்கத்தை பிரசுரித்தது.

Monday, December 7, 2009

கோப்பன்ஹேகன் பருவநிலை மாநாடு - 2009

இன்று 07-12-09 முதல் 18-12-09 முடிய பருவநிலை மாற்றம் தொடர்பான புதிய உலகளாவிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் உலகப் பருவ நிலை மாநாடு துவங்கவுள்ளது. ஏழை மற்றும் வளரும் நாடுகளின் மக்கள் பசியின்றி, பணியின்றி வாழ வளர்ந்த நாடுகள் உதவி புரியவும் வரும் ஆண்டுகள் பிரச்சனைகள் குறைந்த ஆண்டுகளாக மாறத் தக்க வகையில் மாநாட்டில் நல்ல முடிவுகள் எடுக்கப்பட இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.

பொருத்தமான இடத்தில் (டென்மார்க் நாட்டில்) நடைபெறுவதால் இம்மாநாடு சிறப்பு பெறுகிறது. எனது பழைய பதிவு சற்று விளக்கம் தரும்.

டென்மார்க்கை முன்மாதிரி நாடாக ஏற்றுக் கொள்வோமா ?????

மழை இன்மையால் வறட்சி, புயல் மழையால் வெள்ளம் நிலசரிவு, சுனாமி, பூகம்பம், நிலத்தடி நீர்வற்றுதல், பனி உருகுதல், கடல் மட்டம் உயர்தல் என இயற்கை தன் செயல்பாடுகளில் ஈடுபட மனிதன் உருவாக்கும் இயற்கைக்கு எதிரான செயல்களே காரணம். அவன் மனநிலையும் கவலை அளிப்பதாகவே உள்ளது. அதனைப் பற்றி காண :-

புவி வெப்பம் குறித்து இன்றைய மனிதனின் அலட்சிய மனநிலை

நமது ஆஸ்தியை நாம் சட்டப்படி பெற்றுக் கொள்வதாக நினைக்கிறாம் உண்மையில் நாம் அதனை நம் குழந்தைகளிடமிருந்து கடனாக பெற்றிருக்கிறோம். என்பதை நினைவில் கொண்டு இப்பூவுலகை பசுமையாக்கி வளமுள்ளதாக மாற்றி நம் குழந்தைகளுக்கு அளிப்போம்.

தனி மனிதனாக, குடும்பமாக நம்மால் முடியும் சில எளிய காரியங்கள் புவிவெப்பம் குறைய உதவும்.

புவி வெப்பத்திற்கெதிராய் நம்மால் முடிகின்ற 20 செயல்கள்

Saturday, December 5, 2009

பிரேசில் நாட்டில் தோண்டப்பட்ட வெட்டிவேர். படக் காட்சி.

பிரேசில் நாட்டில் வெட்டிவேரை யந்திரம் கொண்டு தோண்டியெடுத்துள்ளனர். வேரின் அளவு 10 அடிக்கு சற்று குறைவாக இருந்துள்ளது. இதில் முக்கிய அம்சம் வேர்கள் செடியின் அகலத்திற்கு ஏற்ப நேராக சென்றுள்ளது. ஆனால் நானறிந்த சில விவசாய நண்பர்கள் இதன் வேர்கள் நிலத்தில் பரவி சத்து அனைத்தையும் உறிஞ்சிவிடும் என்பார்கள். நீளமாக நட்டினால் வருடங்கள் செல்ல அவை உறுதியான 10 அடி உயிர் சுவர் என்பதில் ஐயமில்லை. நீலகிரி மக்கள் வெட்டிவேரை பயன்படுத்தி நீலகிரியின் எழிலை காப்பாற்ற வேண்டும் என்பதே இவ்வலைப் பூவின் விருப்பம்.

படக் காட்சி.

Thursday, December 3, 2009

போபால் விஷவாயு விபத்து - 25 ஆண்டுகள்.

25 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் மறக்க முடியாத மிக மோசமான விபத்து போபால் விஷவாயு விபத்து. இன்றைய இளைஞர்கள் அனைவரும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு. 1984 டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி நள்ளிரவில் போபால் நகரில் ஏற்பட்ட விபத்து மிக மோசமான ஒன்று. போபால் நகரத்திலிருந்த பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலை விவசாயத்திற்கு தேவையான பூச்சிகொல்லி மருந்துகளை தயார் செய்து வந்தது. அங்கிருந்த ஒரு வாயுக் கிடங்கில் இருந்த மிதைல் ஐசோசயனேட் வாயு வெளியேற்றத்தால் ஆயிரக் கணக்கான மக்கள் உறக்கத்திலேயே இறந்தனர் மேலும் நிறைய மக்கள் நுரையீரல், கண் சம்பந்தமான நோய்க்கு ஆளாயினர். மனிதனால் உண்டாக்கப்பட்ட சுற்றுச் சுழல் மாசுபாட்டால் ஏற்பட்ட இந்த விபத்துக்கு 25 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் உரிய இழப்பீடு, அடிப்படை வசதிகள் இல்லாமை, தொடரும் சுகாதார- உடல் நலக் கேடுகள் என அவதியுறும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்த குழந்தையின் இறப்பிற்கு யார் காரணம்.
பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் தங்கள் லாபவெறிக்கு சுகாதாரகேடுகள் உண்டாக்கும் தொழிற்சாலைகளை நிறுவி பல சுகாதார பிரச்சனைகளை நம்மீது தள்ளுகின்றன. நமது ஆட்சியாளர்களும் தொழிலதிபர்களும் அந்நிய முதலீடு, ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்பு என செய்திகளை தருகின்றனர். ஆனால் பிரச்சனை வரும் போதுதான் விளைவுகளை நாம் ஆராய்கிறோம். அதனைவிடுத்து ஆரம்பத்திலேயே இவைகளை கண்டறிந்தால் இழப்புக்களைத் தவிர்த்து வளமான இந்தியாவை காணமுடியும்.